Thiruvarangathamudhanar_Ramanuja_Nootranthadhi


திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி

Azhwar Paasuram Count Media
திருவரங்கத்தமுதனார் இராமாநுச நூற்றந்தாதி 108
Total 108

1   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 1

** பூமன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ்மலிந்த

பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் * பல்கலையோர்

தாம்மன்ன வந்த இராமனுசன் சரணாரவிந்தம்

நாம்மன்னி வாழ * நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே

   

2   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 2

** கள்ளார் பொழில்தென்னரங்கன் * கமலப்பதங்கள் நெஞ்சிற்

கொள்ளா மனிசரை நீங்கி * குறையல் பிரானடிக்கீழ்

விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்

உள்ளாதென்னெஞ்சு * ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே

   

3   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 3

பேரியல்நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை * பேய்ப்பிறவிப்

பூரிய ரோடுள்ள சுற்றம் புலர்த்தி * பொருவருஞ்சீர்

ஆரியன் செம்மை இராமானுசமுனிக் கன்புசெய்யும்

சீரிய பேறுடை யார் * அடிக் கீழ் என்னைச் சேர்த்ததற்கே

   

4   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 4

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி * மருள்சுரந்த

முன்னைப் பழவினை வேரறுத்து * ஊழி முதல்வனையே

பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்

சென்னித் தரிக்கவைத்தான் * எனக்கேதும் சிதைவில்லையே

   

5   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 5

எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று * இசையகில்லா

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் * அவன் மன்னியசீர்

தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா

இனக்குற்றம் காணகில்லார் * பத்தி ஏய்ந்த இயல்விதென்றே

   

6   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 6

இயலும் பொருளும் இசையத் தொடுத்து * ஈன் கவிகளன்பால்

மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை * மதியின்மையால்

பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால்

முயல்கின்றனன் * அவன் தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே

   

7   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 7

** மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்சமுக்குறும்பாம்

குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் *

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடிஅல்லா

வழியைக் கடத்தல் * எனக்கினி யாதும் வருத்தமன்றே

   

8   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 8

வருத்தும் புறவிருள் மாற்ற * எம் பொய்கைப்பிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி * ஒன்றத்

திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் * இராமானுசன் எம் இறையவனே

   

9   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 9

இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட * ஞானமென்னும்

நிறை விளக்கேற்றிய பூதத் திருவடி தாள்கள் * நெஞ்சத்து

உறையவைத் தாளும் இராமானுசன் புகழ் ஓதும்நல்லோர்

மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

   

10   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 10

மன்னிய பேரிருள் மாண்டபின் * கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனை கண்டமை காட்டும் * தமிழ்த்தலைவன்

பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்

சென்னியிற் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே

   

11   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 11

சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழாலளித்த

பாரியலும் புகழ் பாண்பெருமாள் * சரணாம் பதுமத்

தாரியல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்

காரிய வண்மை * என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே

   

12   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 12

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் * இணையடிப்போ

தடங்கும் இதயத்திராமானுசன் * அம்பொற்பாதமென்னும்

கடங்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யாது

இடங்கொண்ட ஞானியர்க்கே * அடியேனன்பு செய்வதுவே

   

13   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 13

செய்யும் பசுந்துளவத்தொழில் மாலையும் * செந்தமிழில்

பெய்யும் மறைத்தமிழ் மாலையும் * பேராத சீரரங்கத்து

ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா

மெய்யன் * இராமானுசன் சரணேகதி வேறெனக்கே

   

14   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 14

கதிக்குப் பதறி * வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்க தவம்செய்யும் கொள்கையற்றேன் * கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் * இராமானுசனென்னைச் சோர்விலனே

   

15   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 15

சோராத காதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லைமாலை யொன்றும்

பாராதவனை பல்லாண்டென்று காப்பிடும் * பான்மையன்தாள்

பேராத உள்ளத்து இராமானுசன்றன் பிறங்கியசீர்

சாராமனிசரைச் சேரேன் * எனக்கென்ன தாழ்வினியே

   

16   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 16

** தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து * தலமுழுதும் கலியே

ஆள்கின்ற நாள்வந்து அளித்தவன் காண்மின் * அரங்கர்மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல் * இராமானுசனென்னும் மாமுனியே

   

17   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 17

முனியார் துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை * கலைபரவும்

தனியானையைத் தண் தமிழ்செய்த நீலன் தனக்கு உலகில்

இனியானை * எங்கள் இராமானுசனை வந்தெய்தினரே

   

18   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 18

எய்தற் கரிய மறைகளை * ஆயிரம் இன்தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்

உய்தற்கு உதவும் * இராமானுசனெம் உறுதுணையே

   

19   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 19

உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் * உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் * மாறன் விளங்கியசீர்

நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர்

அறிதர நின்ற * இராமானுசன் எனக்காரமுதே

   

20   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 20

ஆரப் பொழில்தென் குருகைப் பிரான் * அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்

சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்

வாரிப் பருகும் * இராமானுசனென்றன் மாநிதியே

   

21   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 21

நிதியைப் பொழியும் முகில்என்று * நீசர்தம் வாசல்பற்றி

துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறிசேர்

எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்

கதிபெற்றுடைய * இராமானுசனென்னைக் காத்தனனே

   

22   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 22

கார்த்திகை யானும் கரிமுகத் தானும் * கனலும்முக்கண்

மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு * மூவுலகும்

பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த

தீர்த்தனை யேத்தும் * இராமானுசனென்றன் சேமவைப்பே

   

23   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 23

வைப்பாய வான்பொருள் என்று * நல்லன்பர் மனத்தகத்தே

எப்போதும் வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்

ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்சநெஞ்சில்வைத்து

முப்போதும் வாழ்த்துவன் * என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே

   

24   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 24

மொய்த்தவென் தீவினையால் பல்லுடல்தொறும் மூத்து * அதனால்

எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம் * இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த்தவம் போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவிய

கைத்தமெய்ஞ் ஞானத்து * இராமானுசனென்னும் கார்தன்னையே

   

25   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 25

காரேய் கருணை இராமானுச * இக்கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை * அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபின் உன்

சீரே உயிர்க்குயிராய் * அடியேற்கு இன்று தித்திக்குமே

   

26   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 26

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை * என் செய்வினையாம்

மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை * மேவும்நல்லோர்

எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்

அக்குற்றம் அப்பிறப்பு * அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே

   

27   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 27

கொள்ளக் குறைவற்றிலங்கி * கொழுந்து விட்டோங்கியவுன்

வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீபுகுந்தாய் *

வெள்ளைச் சுடர்விடும் உன்பெருமேன்மைக்கு இழுக்கிதென்று

தள்ளுற்றிரங்கும் * இராமானுச என் தனிநெஞ்சமே

   

28   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 28

நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்தநிமலன் * நங்கள்

பஞ்சித் திருவடி பின்னைதன் காதலன் * பாதம்நண்ணா

வஞ்சர்க் கரிய இராமானுசன் புகழ் அன்றியென்வாய்

கொஞ்சிப் பரவகில்லாது * என்ன வாழ்வின்று கூடியதே

   

29   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 29

கூட்டும் விதியென்று கூடுங்கொலோ * தென் குருகைப்பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னை * தன் பத்தியென்னும்

வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை * என் நாட்டங்கள் கண்டின்பம் எய்திடவே

   

30   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 30

இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலென் * எண்ணிறந்த

துன்பந்தரு நிரயம்பல சூழிலென் * தொல்லுலகில்

மன்பல்லுயிர்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த

அன்பன் அனகன் * இராமானுசனென்னை ஆண்டனனே

   

31   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 31

** ஆண்டுகள் நாள் திங்களாய் * நிகழ் காலமெல்லாம் மனமே

ஈண்டு பல் யோனிகள் தோறுழல்வோம் * இன்றோர் எண்ணின்றியே

காண்தகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்

பூண்டவன்பாளன் * இராமானுசனைப் பொருந்தினமே

   

32   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 32

பொருந்திய தேசும் பொறையும் திறலும் * புகழும் நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் * செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த

அருந்தவன் * எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே

   

33   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 33

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் * கை யாழியென்னும்

படையொடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்கவில்லும் *

புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று

இடையே * இராமானுச முனியாயின இந்நிலத்தே

   

34   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 34

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய

பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை * என்பெய்வினை தென்

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்

நலத்தைப் பொறுத்தது * இராமானுசன்றன் நயப்புகழே

   

35   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 35

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே * சில மானிடத்தைப்

புயலே என கவி போற்றிசெய்யேன் * பொன்னரங்கமென்னில்

மயலே பெருகும் இராம னுசன் மன்னு மாமலர்த்தாள்

அயரேன் * அருவினை என்னை எவ்வாறு இன்றடர்ப்பதுவே

   

36   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 36

அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் * அன்று ஆரணச்சொல்

கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப * பின்னும் காசினியோர்

இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர்பின்

படரும் குணன் * எம்இராமானுசன்றன் படியிதுவே

   

37   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 37

படிகொண்ட கீர்த்தி இராமாயணமென்னும் பத்திவெள்ளம் *

குடிகொண்ட கோயில் இராமானுசன் குணம் கூறும் * அன்பர்

கடிகொண்ட மாமாலர்த்தாள் கலந்துள்ளம் கனியும்நல்லோர்

அடிகண்டு கொண்டுகந்து * என்னையும் ஆளவர்க் காக்கினரே

   

38   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 38

ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று * அவமே

போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு * புண்ணியர்தம்

வாக்கிற் பிரியா இராமானுச நின் அருளின்வண்ணம்

நோக்கில் தெரிவரிதால் * உரையாய் இந்த நுண்பொருளே

   

39   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 39

பொருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாரும் என்றே

மருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே * மற்றுளார்த்தரமோ

இருள்கொண்ட வெந்துயர் மாற்றில் தன்னீறில் பெரும்புகழே

தெருளும் தெருள்தந்து * இராமானுசன் செய்யும் சேமங்களே

   

40   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 40

சேமநல் வீடும் பொருளும் தருமமும் * சீரியநற்

காமமும் என்றிவை நான்கென்பர் * நான்கினும் கண்ணனுக்கே

ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்

வாமனன் சீலன் * இராமானுசன் இந்த மண்மிசையே

   

41   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 41

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்

அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே

   

42   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 42

ஆயிழையார் கொங்கை தங்கும் * அக்காதல் அளற்ற அழுந்தி

மாயுமென் ஆவியை வந்தெடுத்தான் இன்று * மாமலராள்

நாயகன் எல்லாவுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

தூயவன் * தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே

   

43   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 43

சுரக்கும் திருவும் உணர்வும் * சொலப்புகில் வாயமுதம்

பரக்கும் இருவினை பற்றற ஒடும் * படியிலுள்ளீர்

உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியைத்

துரக்கும் பெருமை * இராமானுசனென்று சொல்லுமினே

   

44   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 44

சொல்லார் தமிழொரு மூன்றும் * சுருதிகள் நான்கும் எல்லை

இல்லா அறநெறியாவும் தெரிந்தவன் * எண்ணருஞ்சீர்

நல்லார் பரவும் இராமானுசன் திருநாமம் நம்பிக்

கல்லார் அகலிடத்தோர் * எது பேறென்று காமிப்பரே

   

45   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 45

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி * அப்பேறளித்தற்கு

ஆறொன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி * என்று இப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மை சொல்லால்

கூறும் பரமன்று * இராமானுச மெய்ம்மை கூறிடிலே

   

46   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 46

கூறும் சமயங்கள் ஆறும் குலைய * குவலயத்தே

மாறன் பணித்த மறையுணர்ந்தோனை * மதியிலியேன்

தேறும்படி என்மனம் புகுந்தானைத் திசையனைத்தும்

ஏறும் குணனை * இராமானுசனை இறைஞ்சினமே

   

47   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 47

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று * இவ்வுலகத்து

அறம்செப்பும் அண்ணல் இராமானுசன் * என் அருவினையின்

திறம்செற்று இரவும் பகலும் விடாது என்றன் சிந்தையுள்ளே

நிறைந்து ஒப்பறவிருந்தான் * எனக்காரும் நிகரில்லையே

   

48   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 48

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு * நின்னருளின் கணன்றிப்

புகலொன்னும் இல்லை அருட்குமஃதேபுகல் * புன்மையிலோர்

பகரும் பெருமை இராமானுச இனி நாம்பழுதே

அகலும் பொருளென் * பயன் இருவோமுக்கும் ஆனபின்னே

   

49   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 49

ஆனது செம்மை அறநெறி * பொய்ம்மை அறுசமயம்

போனது பொன்றி இறந்தது வெங்கலி * பூங்கமலத்

தேன் நதி பாய்வயல் தென்னரங்கன் கழல் சென்னிவைத்து

தானதில் மன்னும் * இராமானுசன் இத்தலத்துதித்தே

   

50   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 50

உதிப்பன உத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்

கொதித்திட மாறி நடப்பன * கொள்ளைவன் குற்றமெல்லாம்

பதித்த என் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்

எதித்தலை நாதன் * இராமானுசன்றன் இணையடியே

   

51   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 51

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய் * அன்று பாரதப்போர்

முடியப் பரிநெடுந் தேர்விடும் கோனை * முழுதுணர்ந்த

அடியர்க் கமுதம் இராமானுசன் என்னை ஆளவந்து

இப்படியில் பிறந்தது * மற்றில்லை காரணம் பார்த்திடிலே

   

52   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 52

பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப * இப்பார்முழுதும்

போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத் தான்புகுந்து *

தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு

ஆர்த்தான் * இவையெம் இராமானுசன் செய்யும் அற்புதமே

   

53   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 53

அற்புதன் செம்மை இராமானுசன * என்னை ஆளவந்த

கற்பகம் கற்றவர் காமுறு சீலன் * கருதரிய

பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனது என்னும்

நற்பொருள் தன்னை * இந்நானிலத் தேவந்து நாட்டினனே

   

54   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 54

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன * நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற்றது * தென் குருகைவள்ளல்

வாட்டமிலா வண்டமிழ் மறைவாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து * இராமானுசன்றன் இயல்வுகண்டே

   

55   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 55

கண்டவர் சிந்தை கவரும் * கடிபொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமானுசனை * தொகையிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும் * குடியாமெங்கள் கோக்குலமே

   

56   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 56

கோக்குல மன்னரை மூவேழுகால் * ஒரு கூர்மழுவால்

போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் * புவனமெங்கும்

ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்தபின் என்

வாக்குரையாது * என் மனம் நினையாதினி மற்றொன்றையே

   

57   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 57

மற்றொரு பேறு மதியாது * அரங்கன் மலரடிக்காள்

உற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை *

நற்றவர் போற்றும் இராமானுசனையிந் நானிலத்தே

பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன் ஒரு பேதைமையே

   

58   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 58

பேதையர் வேதப்பொருள் இது என்று உன்னி * பிரமம் நன்றென்று

ஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று * உயிர்கள்மெய்விட்டு

ஆதிப்பரனோடு ஒன்றாமென்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்

வாதில்வென்றான் * எம் இராமானுசன் மெய் மதிக்கடலே

   

59   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 59

கடலள வாய திசை எட்டி னுள்ளும் * கலியிருளே

மிடைதரு காலத்து இராமானுசன் * மிக்க நான்மறையின்

சுடரொளியால் அவ்விருளைத் துரத்திலனேல் உயிரை

உடையவன் * நாரணன் என்று அறிவாரில்லை உற்றுணர்ந்தே

   

60   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 60

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் * திருவாய்மொழியின்

மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் * மாமலராள்

புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்

குணந்திகழ் கொண்டல் * இராமானுசன் எங்குலக்கொழுந்தே

   

61   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 61

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் * நிரயத்து

அழுந்தியிட்டேனை வந்தாட்கொண்ட பின்னும் * அருமுனிவர்

தொழுந்தவத்தோன் எம் இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்

கெழுந்தது * அத்தால் நல்லதிசயங்கண்டது இருநிலமே

   

62   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 62

இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி * இன்று யான் இறையும்

வருந்தேன் இனியெம் இராமானுசன் * மன்னு மாமலர்த்தாள்

பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யாப்

பெருந்தேவரைப் பரவும் * பெரியோர்தம் கழல்பிடித்தே

   

63   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 63

பிடியைத் தொடரும் களிறென்ன * யானுன் பிறங்கியசீர்

அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் * அறுசமயச்

செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோட வந்து

இப்படியைத் தொடரும் * இராமானுச மிக்க பண்டிதனே

   

64   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 64

பண்தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய்மதமாய்

விண்டிட எங்கள் இராமானுசமுனி வேழம் * மெய்ம்மை

கொண்ட நல்வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே

மண்டி வந்தேன்றது * வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே

   

65   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 65

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு * என்றும் மறையவர்தம்

தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது * தத்துவநூல்

கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினர்க்கு

அந்நாழற்றது * நம் இராமானுசன் தந்த ஞானத்திலே

   

66   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 66

ஞானம் கனிந்த நலங்கொண்டு * நாடொரும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன் * வல்வினையேன் மனத்தில்

ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்குத்

தானம் கொடுப்பது * தன் தகவென்னும் சரண்கொடுத்தே

   

67   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 67

சரணம் அடைந்த தருமனுக்கா * பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் * தன்னை வணங்கவைத்த

கரணம் இவை உமககன்றென்று இராமானுசன் உயிர்கட்கு

அரணங்கு அமைத்திலனேல் * அரணார் மற்று இவ்வாருயிர்க்கே

   

68   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 68

ஆரெனக்கின்று நிகர்ச்சொல்லில் * மாயன் அன்று ஐவர்த்தெய்வத்

தேரினில் செப்பிய கீதையின் * செம்மைப் பொருள்தெரியப்

பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்

சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே

   

69   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 69

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன்னாள்

அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு * அவை என்றனக்கு அன்று அருளால்

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து *

எந்தை இராமானுசன் வந்தெடுத்தனன் இன்றென்னையே

   

70   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 70

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து * எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் * அன்றி என்பால்

பின்னையும் பார்க்கில் நலமுளதே உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் * இராமானுச உன்னைச் சார்ந்தவரே

   

71   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 71

சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் * அன்புதான் மிகவும்

கூர்ந்தது அத்தாமரைத் தாள்களுக்கு * உன்றன் குணங்களுக்கே

தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீசெய் வினையதனால்

பேர்ந்தது * வண்மை இராமானுச எம் பெருந்தகையே

   

72   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 72

கைத்தனன் தீய சமயக் கலகரை * காசினிக்கே

உய்த்தனன் தூய மறை நெறி தன்னை * என்று உன்னி உள்ளம்

நெய்து அவ்வன்போடு இருந்தேத்தும் நிறை புகழோருடனே

வைத்தனன் என்னை * இராமானுசன் மிக்க வண்மை செய்தே

   

73   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 73

வண்மையினாலும் தன் மாதக வாலும் * மதிபுரையும்

தண்மையினாலும் இத்தாரணியோர்கட்கு * தான்சரணாய்

உண்மைநன் ஞானம் உரைத்த இராமானுசனை உன்னும்

திண்மையல்லால் எனக்கில்லை * மற்றோர் நிலை தேர்ந்திடிலே

   

74   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 74

தேரார் மறையின் திறமென்று * மாயவன் தீயவரைக்

கூராழி கொண்டு குறைப்பது * கொண்டல் அனையவண்மை

ஏரார் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில்மறையில்

சேராதவரைச் சிதைப்பது * அப்போதொரு சிந்தை செய்தே

   

75   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 75

செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் * திருவரங்கர்

கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி * நங்கண் முகப்பே

மொய்த்தலைத்து உன்னை விடேனென்னு இருக்கிலும் நின்புகழே

மொய்த்தலைக்கும் வந்து * இராமானுச என்னை முற்றும் நின்றே

   

76   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 76

** நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் * நிறை வேங்கடப்பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் *

உன்றனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த்தாள்

என்றனக்கும் அது * இராமானுச இவை யீந்தருளே

   

77   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 77

ஈந்தனன் ஈயாத இன்னருள் * எண்ணில் மறைக்குறும்பைப்

பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால் * இப்படி அனைத்தும்

ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர்பறியக்

காய்ந்தனன் * வண்மை இராமானுசற்கு என் கருத்தினியே

   

78   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 78

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி * கருதரிய

வருத்தத்தினால் மிக வஞ்சித்து * நீ இந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கியபின் என்னெஞ்சில்

பொருத்தப்படாது * எம் இராமானுச மற்றோர் பொய்ப் பொருளே

   

79   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 79

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து * இந்தப் பூதலத்தே

மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க * வேறுநம்மை

உய்யக் கொளவல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே

ஐயப் படாநிற்பர் * வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே

   

80   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 80

நல்லார் பரவும் இராமானுசன் * திருநாமம் நம்ப

வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் * அவர்க்கே

எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்

சொல்லால் மனத்தால் * கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே

   

81   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 81

சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ் * தொண்டு பட்டவர்பால்

சார்வின்றி நின்ற எனக்கு * அரங்கன் செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி உன்

சீரொன்றிய கருணைக்கு * இல்லை மாறு தெரிவுறிலே

   

82   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 82

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது * வெந் தீவினையால்

உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை * ஒருபொழுதில்

பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணீயனோ

தெரிவுற்ற கீர்த்தி * இராமானுசன் என்னும் சீர்முகிலே

   

83   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 83

சீர்கொண்டு பேரறம் செய்து * நல்வீடு செறிதும் என்னும்

பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் * உன் பதயுகமாம்

ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார்கொண்ட வண்மை * இராமானுச இது கண்டுகொள்ளே

   

84   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 84

கண்டுகொண்டேன் எம் இராமானுசன் தன்னை * காண்டலுமே

தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் * என் தொல்லை வெந்நோய்

விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ளவாரியை வாய்மடுத்து இன்று

உண்டுகொண்டேன் * இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே

   

85   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 85

ஓதிய வேதத்தின் உட்பொருளாய் * அதன் உச்சிமிக்க

சோதியை நாதன் என அறியாது உழல்கின்றதொண்டர் *

பேதைமை தீர்த்த இராமானுசனைத் தொழும்பெரியோர்

பாதம் அல்லால் என்றன் ஆருயிர்க்கு * யாதொன்றும் பற்றில்லையை

   

86   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 86

பற்றா மனிசரைப் பற்றி * அப்பற்று விடாதவரே

உற்றாரென உழன்றோடி நையேன் இனி * ஒள்ளியநூல்

கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்

பெற்றார் எவர் * அவர் எம்மை நின்றாளும் பெரியவரே

   

87   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 87

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் * தன் குணங்கட்கு

உரியசொல் என்றும் உடையவன் என்றென்று * உணர்வில்மிக்கோர்

தெரியும்வண் கீர்த்தி இராமானுசன் மறைதேர்ந்து உலகில்

புரியும் நல் ஞானம் * பொருந்தாதவரைப் பொரும்கலியே

   

88   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 88

கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப்பெருமான்

ஒலிமிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து * அதனால்

வலிமிக்க சீயம் இராமானுசன் மறை வாதியராம்

புலிமிக்கது என்று * இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே

   

89   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 89

போற்றரும் சீலத்து இராமானுச * நின் புகழ்தெரிந்து

சாற்றுவனேல் அது தாழ்வது தீரில் * உன்சீர் தனக்கோர்

ஏற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தியன்றி

ஆற்றகில்லாது * இதற்கு என்னினை வாயென்றிட்டு அஞ்சுவனே

   

90   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 90

நினையார் பிறவியை நீக்கும் பிரானை * இந் நீள் நிணிலத்தே

எனையாள வந்த இராமானுசனை * இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் * பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே

   

91   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 91

மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும் * அவப்பொருளாம்

இருள்சுரந்து எய்த்த உலகிருள் நீங்க * தன் ஈண்டியசீர்

அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

பொருள்சுரந்தான் * எம் இராமானுசன் மிக்க புண்ணியனே

   

92   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 92

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் * அடி போற்றி செய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன் * செம்மைநூற் புலவர்க்கு

எண்ணருங் கீர்த்தி இராமானுச இன்று நீ புகுந்து என்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் * நின்ற இக்காரணம் கட்டுரையே

   

93   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 93

கட்டப் பொருளை மறைப் பொருள் என்று * கயவர்சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே * என் பெருவினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள்வாள் உருவி

வெட்டிக் களைந்த * இராமானுசன் என்னும் மெய்த்தவனே

   

94   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 94

தவம் தரும் செல்வம் தகவும் தரும் * சரியாப்பிறவிப்

பவந்தரும் தீவினை பாற்றித் தரும் * பரந்தாமம் என்னும்

திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு

உவந்தருந்தேன் * அவன் சீரன்றி யான் என்றும் உள்மகிழ்ந்தே

   

95   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 95

உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து * அவர்க்கு உய்யவே

பண்ணும் பரனும் பரிவிலனாம் படி * பல்லுயிர்க்கும்

விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமானுசன்

மண்ணின் தலத்து உதித்து * மறை நாலும் வளர்த்தனனே

   

96   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 96

வளரும் பிணிகொண்ட வல்வினையால் * மிக்க நல்வினையில்

கிளரும் துணிவு கிடைத்தறியாது * முடைத்தலையூன்

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு

உளரெம் இறைவர் * இராமானுசன் தன்னை உற்றவரே

   

97   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 97

தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர் * மன்னு தாமரைத்தாள்

தன்னை உற்றாட்செய்ய என்னை உற்றான் இன்று * தன்தகவால்

தன்னை உற்றார் அன்றித் தன்மை உற்றாரில்லை என்றறிந்து

தன்னை உற்றாரை * இராமானுசன் குணம் சாற்றிடுமே

   

98   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 98

** இடுமே இனிய சுவர்க்கத்தில் * இன்னும் நரகிலிட்டுச்

சுடுமே அவற்றைத் தொடர்தரு தொல்லை * சுழல்பிறப்பில்

நடுமே இனி நம் இராமானுசன் நம்மை நம்வசத்தே

விடுமே சரணமென்றால் * மனமே நையல் மேவுதற்கே

   

99   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 99

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் * தாழ்சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் * நான்மறையும்

நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற்கற்பகம் * எம் இராமானுசமுனி போந்தபின்னே

   

100   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 100

போந்தது என் நெஞ்சென்னும் பொன்வண்டு * உனதடிப் போதில் ஒண்சீர்

ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி * நின் பால் அதுவே

ஈந்திட வேண்டும் இராமானுச இது அன்றி ஒன்றும்

மாந்தகில்லாது * இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

   

101   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 101

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு * மதிமயங்கித்

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை * துயரகற்றி

உயக்கொண்டு நல்கும் இராமானுச என்றது உன்னை உன்னி

நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் * நல்லவர் என்றும் நைந்தே

   

102   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 102

நையும் மனம் உன் குணங்களை உன்னி * என் நாவிருந்து எம்

ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் * அருவினையேன்

கையும் தொழும் கண்கருதிடும் காணக் கடல்புடைசூழ்

வையம் இதனில் * உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே

   

103   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 103

வளர்ந்த வெங்கோபம் மடங்கல் ஒன்றாய் * அன்று வாளவுணன்

கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடும் சிந்தை இராமானுசன் என்றன் மெய்வினைநோய்

களைந்து நன் ஞானம் அளித்தனன் * கையிற் கனியென்னவே

   

104   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 104

கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் * உன்றன்

மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் * நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ

செய்யில் தரிப்பன் * இராமானுச என் செழும் கொண்டலே

   

105   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 105

** செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன் * திருவடிக்கீழ்

விழுந்திருப்பார் நெஞ்சில் மேவுநல் ஞானி * நல் வேதியர்கள்

தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்

எழுந்து இரைத்து ஆடும் இடம் * அடியேனுக்கு இருப்பிடமே

   

106   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 106

** இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ்சோலை என்னும்

பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் * அவை தன்னொடும் வந்து

இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து

இருப்பிடம் * என்றன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே

   

107   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 107

** இன்புற்ற சீலத்து இராமானுச * என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்து இறந்து * எண்ணரிய

துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு உன் தொண்டர்கட்கே

அன்புற்று இருக்கும் படி * என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே

   

108   திருவரங்கத்தமுதனார் – இராமாநுச நூற்றந்தாதி – 108

** அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் * அணி ஆகமன்னும்

பங்கய மாமலர் பாவையைப் போற்றுதும் * பத்தியெல்லாம்

தங்கியது என்னத் தழைத்து நெஞ்சே நம் தலைமிசையே

பொங்கிய கீர்த்தி * இராமானுசன் அடிப்பூ மன்னவே