033-ThiruSemponSeiKovil


Thiru Sempon Sei Kovil ( Sri Per Arulaalan Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.1

** பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை *

வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப *

சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.2

பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை *

இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை *

சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.3

திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும் *

படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய * திடமொழி

மறையோர் நாங்கைநன் னடுவுள்  செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.4

வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை *

அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை *

திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.5

தீமனத் தரக்கர் திறலழித் தவனே என்றுசென் றடைந்தவர் தமக்கு *

தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே *

தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.6

மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை *

கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை *

செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.7

வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை *

கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை *

செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.8

அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை *

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை *

தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.9

களங்கனி வண்ணா கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு *

உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை *

தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.10

** தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி *

ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள் *

மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே