031-ThiruArimeyaVinnagaram


Thiru Arimeya Vinnagaram ( Sri Kuda Maadu Koothan Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.1

** திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்

அருள்நடந்து * இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்அமர்ந்தேத்த இருந்தவிடம் * பெரும்புகழ்வே தியர்வாழ்

தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர் தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ *

அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.2

வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும் விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு * அன்று

குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும் குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில் *

என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர் *

அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.3

உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த *

கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில் * மருங் கெங்கும்

பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல் *

அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.4

ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன் றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி *

வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக் கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர் *

சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே *

ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.5

கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு *

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம் அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே *

அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும் அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும் *

அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.6

வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர *

தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன் தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம் தடமார் *

சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம் *

வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.7

தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான் *

காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான் கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி *

நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று * அங்

காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.8

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான் *

குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள் *

துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர் தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை *

அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.9

வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு * வலிமிக்க

கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி *

மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி *

அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.10.10

** சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில் *

அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை *

கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான் கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும் *

ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத் துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே