096-Thiruvengadam


Thiruvengadam ( Thirumalai Thirupathi Venkateswara Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
7

ஆண்டாள் நாச்சியார் திருமொழி
16

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
11

திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்
3

திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி
12

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்
2

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
55

திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
1

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
3

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
10

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
9

பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி
19

நம்மாழ்வார் திருவிருத்தம்
8

நம்மாழ்வார் திருவாய்மொழி
44

Total
202

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.3

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் *

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் *

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற *

கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா

  

 

  

 

  


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.9.8

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் *

முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன *

மன்னு நமுசியை வானில் சுழற்றிய *

மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ

  

 

  

 

  


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.6.9

தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து *

மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு *

என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற *

மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா

  

 

  

 

  


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.7.3

மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு *

கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி *

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய் *

பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்

  

 

  

 

  


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.9.6

போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய் *

ஏதேனும் சொல்லி அசல கத்தார்ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன் *

கோது கலமுடைக் குட்ட னேயா குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா *

வேதப் பொருளே என்வேங்கடவா வித்தக னேஇங்கே போத ராயே

  

 

  

 

  


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.3.4

கடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றே * நீ யுகக்கும்

குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே *

கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல

அடியும் வெதும்பி * உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்

  

 

  

 

  


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.4.1

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் * உலகு

தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா * என்னையும்

என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *

நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே

  

 

  

 

  


8   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 1.1

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள் *

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா *

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியையும் தொழுதேன் *

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே

  

 

  

 

  


9   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 1.3

மத்தநன் னறுமலர் முருக்கமலர் கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி *

தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை வைதிடாமே *

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்த னென்பதோர் பேரேழுதி *

வித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

 

  

 

  

 

  


10   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 4.2

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் *

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன் *

ஓட்ட ராவந்தென் கைப்பற்றி * தன்னொடும்

கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே

  

 

  

 

  


11   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 5.2

வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான் *

உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் *

கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே *

மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்

  

 

  

 

  


12   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.1

** விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் *

தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே *

கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை *

பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

  

 

  

 

  


13   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.2

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் * வேங்கடத்துச்

சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே *

காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் *

ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே

  

 

  

 

  


14   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.3

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம் *

எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால் *

குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி *

அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே

  

 

  

 

  


15   ஆண்டாள்6, – நாச்சியார் திருமொழி – 8.4

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் * வேங்கடத்துத்

தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு *

என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும் *

பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே

  

 

  

 

  


16   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.5

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள் *

ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான் *

தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே

  

 

  

 

  


17   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.6

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் * மாவலியை

நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள் *

உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து * என்னை

நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே

  

 

  

 

  


18   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.7

** சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் * வேங்கடத்துச்

செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் *

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து * ஒருநாள்

தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே

  

 

  

 

  


19   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.8

கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் * வேங்கடத்துப்

போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி *

நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை *

வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே!

  

 

  

 

  


20   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.9

** மதயானை போலெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்தைப்

பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே *

கதியென்றும் தானாவான் கருதாது * ஓர் பெண்கொடியை

வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே

  

 

  

 

  


21   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 8.10

** நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய் *

மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம் *

போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ் *

ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே

  

 

  

 

  


22   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 10.5

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் * நல் வேங்கட

நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின் *

ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து *

கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே

  

 

  

 

  


23   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 10.8

மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்று *

மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற *

அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்

தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண் டூற்றவும் வல்லையே

  

 

  

 

  


24   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.1

** ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன் *

ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால் *

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து *

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

  

 

  

 

  


25   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.2

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ *

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் *

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில் *

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

  

 

  

 

  


26   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.3

பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும் *

துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல் *

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் *

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

  

 

  

 

  


27   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.4

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள் *

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு *

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து *

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே

  

 

  

 

  


28   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.5

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து *

இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் *

எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல் *

தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

  

 

  

 

  


29   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.6

மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும் *

அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன் *

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் *

அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே

  

 

  

 

  


30   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.7

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் * மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் *

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் *

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

  

 

  

 

  


31   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.8

பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் *

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் *

வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் *

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே

  

 

  

 

  


32   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.9

** செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே *

நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் *

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் *

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

  

 

  

 

  


33   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.10

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் * உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் *

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் *

எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே

  

 

  

 

  


34   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.11

** மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன் *

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி *

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன *

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

  

 

  

 

  


35   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 48

குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து * மண்

ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து

பன்றியாய் * நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு *

அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே

  

 

  

 

  


36   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 60

செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய் *

விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று *

எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ் *

செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே

  

 

  

 

  


37   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 81

கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து *

உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய் *

மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம் *

அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ

  

 

  

 

  


38   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 34

குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த *

குறிப்பெனக்கு நன்மை பயக்க * வெறுப்பனோ

வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல் *

தான்கடத்தும் தன்மையான் தாள்

  

 

  

 

  


39   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 39

அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண *

இழைப்பன் திருக்கூடல் கூட * மழைப்பே

ரருவி மணிவரன்றி வந்திழிய * யானை

வெருவி யரவொடுங்கும் வெற்பு

  

 

  

 

  


40   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 40

வெற்பென்று வேங்கடம் பாடினேன் * வீடாக்கி

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் * கற்கின்ற

நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் *

கால்வலையில் பட்டிருந்தேன் காண்

  

 

  

 

  


41   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 41

காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர *

ஓண விழவில் ஒலியதிர * பேணி

வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய் *

திருவேங் கடமதனைச் சென்று

  

 

  

 

  


42   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 42

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை *

நின்று வினைகெடுக்கும் நீர்மையால் * என்றும்

கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும் *

அடிக்கமலம் இட்டேத்து மங்கு

  

 

  

 

  


43   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 43

மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை *

கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் * திங்கள்

சடையேற வைத்தானும் தாமரைமே லானும் *

குடையேறத் தாம்குவித்துக் கொண்டு

  

 

  

 

  


44   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 44

கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய் *

தண்ட அரக்கன் தலைதளால் * பண்டெண்ணி

போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே *

போம்குமர ருள்ளீர் புரிந்து

  

 

  

 

  


45   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 45

புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம் *

பரிந்து படுகாடு நிற்ப * தெரிந்தெங்கும்

தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே *

வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு

  

 

  

 

  


46   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 46

வைப்பன் மணிவிளக்கா மாமதியை * மாலுக்கென்

றெப்பொழுதும் கைநீட்டும் யானையை * எப்பாடும்

வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே *

நாடுவளைத் தாடுமேல் நன்று

  

 

  

 

  


47   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 47

நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் *

பொன்மணியும் முத்தமும் பூமரமும் * பன்மணிநீ

ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் *

வேடு முடைவேங் கடம்

  

 

  

 

  


48   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 48

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் * மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும் * வேங்கடமே

தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு *

வானவரைக் காப்பான் மலை

  

 

  

 

  


49   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 90

வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார் * வேங்கடத்தான்

பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள் * மேல்திருந்த

வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய் * மற்றவர்க்கே

தாழா யிருப்பார் தமர்

  

 

  

 

  


50   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 1

அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் * விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் *

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் * திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே

  

 

  

 

  


51   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 3

** மந்தி பாய்வட வேங்கட மாமலை * வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான் *

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில் *

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே

  

 

  

 

  


52   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.1

** கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான் *

சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன் *

பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம் * பொங்குநீர்ச்

செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே

  

 

  

 

  


53   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.2

** பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *

பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம் *

வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாடொறும்

தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


54   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.3

நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான் *

என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான் *

கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான் *

சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


55   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.4

** பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர் *

கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன் *

ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான் *

தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


56   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.5

வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய் *

மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான் *

எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான் *

திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


57   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.6

எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து *

பண்டோராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன் *

ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு *

திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


58   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.7

பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான் *

பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம் *

காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர *

சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


59   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.8

அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன் *

வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன் *

கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும் *

செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


60   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.9

பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று பின்னரும் *

பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் *

வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம் *

தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


61   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.10

** செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை *

மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள் *

சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே *

வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே

  

 

  

 

  


62   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.1

** தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும் *

நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால் *

வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா *

நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே

  

 

  

 

  


63   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.2

மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து *

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன் *

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை * என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


64   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.3

கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால் *

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன் *

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா *

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


65   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.4

குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன் *

நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன் *

நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா *

அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


66   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.5

எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன் *

துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன் *

செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை * என்

அப்பா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


67   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.6

மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம் *

புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன் *

விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா *

அண்ணா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


68   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.7

தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன் *

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன் *

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா *

அரியே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


69   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.8

நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால் *

ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான் *

கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா *

ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


70   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.9

பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன் *

மற்றேலொன்றறியேன் மாயனே  எங்கள்மாதவனே *

கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா *

அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

  

 

  

 

  


71   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.9.10

** கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை *

விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை *

திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன் *

பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே

  

 

  

 

  


72   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.1

** கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன் *

திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய் *

விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய *

அண்ணா அடியேன் இடரைக்களையாயே

  

 

  

 

  


73   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.2

இலங்கைப்பதிக்கு அன்றீறையாய * அரக்கர்

குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய் *

விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய *

அலங்கல்துளபமுடியாய் அருளாயே

  

 

  

 

  


74   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.3

நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு *

ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய் *

சீரார் திருவேங்கடமாமலைமேய *

ஆராவமுதே அடியேற்கருளாயே

  

 

  

 

  


75   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.4

உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக *

கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே *

விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய *

அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே

  

 

  

 

  


76   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.5

தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி *

பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய் *

சேணார் திருவேங்கடமாமலைமேய *

கோணாகணையாய குறிக்கொள்ளெனைநீயே

  

 

  

 

  


77   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.6

மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி *

தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன் *

மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய *

என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே

  

 

  

 

  


78   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.7

மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த *

ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா *

தேனே திருவேங்கடமாமலைமேய *

கோனே என்மனம் குடிகொண்டிருந்தாயே

  

 

  

 

  


79   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.8

சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன் *

மணிவாளொளி வெண்டரளங்கள் *

வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய *

ஆயனடியல்லது மற்றறையேனே

  

 

  

 

  


80   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.9

வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய் *

நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ *

சிந்தாமணியே திருவேங்கடம்மேய

எந்தாய் * இனியானுன்னை யென்றும் விடேனே

  

 

  

 

  


81   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.10.10

** வில்லார்மலி வேங்கடமாமலைமேய *

மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை *

கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை *

வல்லாரவர் வானவராகுவர்த்தாமே

  

 

  

 

  


82   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.1

** வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே இனிவந்து * மாதவ

மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை *

கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி * மாண்குறள்

ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

  

 

  

 

  


83   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.2

உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை * மண்மிசைப்

பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய் *

குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து *

அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே

  

 

  

 

  


84   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.3

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும் * வானிடைக்

கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய் *

வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும் * மீமிசை

அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே

  

 

  

 

  


85   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.4

பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே பண்டு தொண்டுசெய் தாரை * மண்மிசை

மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை *

கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு * வானவர்

ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே

  

 

  

 

  


86   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.5

பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை *

தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய் *

எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள் *

அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

  

 

  

 

  


87   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.6

துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும் *

தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய் *

கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை *

அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே

  

 

  

 

  


88   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.7

தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை * மிடற்றிடை

நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய் *

மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும் * வானிடை

அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

  

 

  

 

  


89   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.8

சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே *

என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே *

வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய *

ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

  

 

  

 

  


90   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.9

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள் *

பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா *

ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும் * வேங்கடத்து

ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே

  

 

  

 

  


91   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.1.10

** மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய *

அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை *

கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த * இம்

மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே

  

 

  

 

  


92   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.3.8

அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை *

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை *

தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *

மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே

  

 

  

 

  


93   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.5

** வேடார் திருவேங் கடம்மேய விளக்கே *

நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர் *

சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய் *

பாடா வருவேன் விணையா யினபாற்றே

  

 

  

 

  


94   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.3.4

வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த *

காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருளெனக்கு *

மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த *

தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே

  

 

  

 

  


95   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.1

** வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால் *

மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள் * வண்டார் கொண்டல்

உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட

திருவாளன் * என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே

  

 

  

 

  


96   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.7

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை * பிரியாது

வந்தெனது மனத்திருந்த வடமலையை * வரிவண்டார்

கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த

அந்தணனை * யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,

  

 

  

 

  


97   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.1

** மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய் * மாவலிமண்

தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை *

தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை *

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


98   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.5

ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து

தாங்கு * தாமரை யன்னபொன் னாரடி எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற *

வேங்கடத்தரி யைப்பரி கீறியை வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட

தீங்க ரும்பினை * தேனைநன் பாலினை அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே

  

 

  

 

  


99   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.3

எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை வாச வார்குழ லாள்மலை மங்கைதன்

பங்க னை * பங்கில் வைத்துகந் தான்றன்னைப் பான்மை யைப்பனி மாமதி யம்தவழ் *

மங்கு லைச் சுட ரைவட மாமலை உச்சியை நச்சி நாம்வணங் கப்படும்

கங்குலை * பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


100   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.3

** அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்

வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *

பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்

உருகினாள் * உள்மெலிந் தாள்இது வென்கொலோ

  

 

  

 

  


101   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.7.4

பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று *

எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல் *

விண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் * வளங்கொள்

முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

  

 

  

 

  


102   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.9

** வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை *

புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை *

சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற *

நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே

  

 

  

 

  


103   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.2

** பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்

மின்னை * வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் *

என்னை யாளுடை யீசனை யெம்பிரான்

றன்னை * யாம்சென்று காண்டும்தண் காவிலே

  

 

  

 

  


104   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.10.5

** சொல்லாய் பைங்கிளியே *

சுடராழி வலனுயர்த்த *

மல்லார் தோள்வட வேங்கட வன்வர *

சொல்லாய் பைங்கிளியே

  

 

  

 

  


105   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.3.7

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் * கைவளைகள்

என்னோ கழன்ற இவையென்ன மாயங்கள் *

பெண்ணானோம் பெண்மையோம் நிற்க * அவன்மேய

அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே

  

 

  

 

  


106   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.5.10

** கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான் *

வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ *

வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும் * கலிகன்றி

உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே

  

 

  

 

  


107   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 7

இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற *

மெய்ம்மையை விரிந்த சோலை வியந்திரு வரங்கம் மேய *

செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை *

தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே

  

 

  

 

  


108   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 8

** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் * ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே

  

 

  

 

  


109   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 9

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே

  

 

  

 

  


110   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 16

கன்றுமேய்த் தினிதுகந்த காளாய் என்றும் கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே என்றும் *

மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும் *

வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும் விரிபொழில்சூழ் திருநறையூர்  நின்றாய்என்றும் *

துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே

  

 

  

 

  


111   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 69

நானவனை காரார் திருமேனி காணுமளவும்போய் *

** சீரார் திருவேங் கடமே திருக்கொவல் ஊரே

  

 

  
 

 

  


112   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 6,124

என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த * மழைக்கூந்தல் 

தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்

———————–

** தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை *

மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை

  

 

  
 

 

  


113   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 26

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை *

வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார் *

வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே * வானோர்

மனச்சுடரைத் தூண்டும் மலை

  

 

  

 

  


114   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 37

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் * நாளும்

புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி * திசைதிசையின்

வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே * வெண்சங்கம்

ஊதியவாய் மாலுகந்த வூர்

  

 

  

 

  


115   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 38

ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை *

பேர எறிந்த பெருமணியை * காருடைய

மின்னென்று புற்றடையும் வேங்கடமே * மேலசுரர்

என்னென்ற மால திடம்

  

 

  

 

  


116   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 39

இடந்தது பூமி எடுத்தது குன்றம் *

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச * கிடந்ததுவும்

நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே *

பேரோத வண்ணர் பெரிது

  

 

  

 

  


117   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 40

பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ *

வெருவிப் புனம்துறந்த வேழம் * இருவிசும்பில்

மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே * மேலசுரர்

கோன்வீழ கண்டுகந்தான் குன்று

  

 

  

 

  


118   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 68

உணர்வாரா ருன்பெருமை யூழிதோ றூழி *

உணர்வாரா ருன்னுருவந் தன்னை * உணர்வாரார்

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் * நால்வேதப்

பண்ணகத்தாய் நீகிடந்த பால்

  

 

  

 

  


119   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 76

வழிநின்று நின்னைத் தொழுவார் * வழுவா

மொழிநின்ற மூர்த்தியரே யாவர் * பழுதொன்றும்

வாராத வண்ணமே விண்கொடுக்கும் * மண்ணளந்த

சீரான் திருவேங் கடம்

  

 

  

 

  


120   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 77

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *

என்றால் கெடுமாம் இடர்

  

 

  

 

  


121   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 82

படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள் * பைம்பூந்

தொடையலோ டேந்திய தூபம், * இடையிடையின்

மீன்மாய மாசூணும் வேங்கடமே * மேலொருநாள்

மான்மாய எய்தான் வரை

  

 

  

 

  


122   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 99

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்

உளன்கண்டாய் * உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய் *

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும் *

உள்ளத்தி னுள்ளனென் றோர்

  

 

  

 

  


123   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 25

சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால் *

கொன்ற திராவணனைக் கூறுங்கால் * நின்றதுவும்

வேயோங்கு தண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம்

வாயோங்கு தொல்புகழான் வந்து

  

 

  

 

  


124   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 28

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்

நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் * எனைப்பலரும்

தேவாதி தேவ னெனப்படுவான் * முன்னொருனாள்

மாவாய் பிளந்த மகன்

  

 

  

 

  


125   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 33

துணிந்தது சிந்தை துழாயலங்கல் * அங்கம்

அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால் * பணிந்ததுவும்

வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே *

வாய்திறங்கள் சொல்லும் வகை

  

 

  

 

  


126   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 45

உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று *

தளர்தல் அதனருகும் சாரார் * அளவரிய

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும் *

பாதத்தான் பாதம் பயின்று

  

 

  

 

  


127   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 46

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *

மணிதிகழும் வண்தடக்கை மால்

  

 

  

 

  


128   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 53

நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து *

அறியா திளங்கிரியென் றெண்ணி * பிறியாது

பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும் *

வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு

  

 

  

 

  


129   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 54

வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் *

நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல் * நிற்பென்

றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன் * வெள்ளத்

திளங்கோயில் கைவிடேல் என்று

  

 

  

 

  


130   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 72

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு * ஆங்கலர்ந்த

போதரிந்து கொண்டேத்தும் * போது உள்ளம் போது

மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல *

அணிவேங் கடவன்பே ராய்ந்து

  

 

  

 

  


131   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 75

பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று *

இருக ணிளமூங்கில் வாங்கி * அருகிருந்த

தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர் *

வான்கலந்த வண்ணன் வரை

  

 

  

 

  


132   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 14

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு *

நூற்பால் மனம்வைக்க நொய்விதாம் * நாற்பால

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும் *

பாதத்தான் பாதம் பணிந்து

  

 

  

 

  


133   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 26

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *

நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்,

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *

தாம்கடவார் தண்டுழா யார்

  

 

  

 

  


134   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 30

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் *

நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு * வாய்ந்த

மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி *

இறைபாடி யாய இவை

  

 

  

 

  


135   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 32

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும் *

நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல் * பாற்பட்

டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் *

குருந்தொசித்த கோபா லகன்

  

 

  

 

  


136   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 39

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய் *

மறையாய் மறைப்பொருளாய் வானாய் * பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான் *

உள்ளத்தி னுள்ளே உளன்

  

 

  

 

  


137   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 40

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தம னென்றும்

உளன்கண்டாய் * உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய் *

விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான் *

மண்ணெடுங்கத் தானளந்த மன்

  

 

  

 

  


138   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 45

புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித் *

திரிந்து சினத்தால் பொருது * விரிந்தசீர் வெண்கோட்டு

முத்துதிர்க்கும் வேங்கடமே * மேலொருநாள்

மண்கோட்டுக் கொண்டான் மலை

  

 

  

 

  


139   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 58

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி *

அளிந்த கடுவனையே நோக்கி * விளங்கிய

வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே * மேலொருநாள்

மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு

  

 

  

 

  


140   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61

** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *

இளங்குமரன் றன்விண் ணகர்

  

 

  

 

  


141   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

  

 

  

 

  


142   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 63

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் *

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் * சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு *

இரண்டுருவு மொன்றாய் இசைந்து

  

 

  

 

  


143   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 68

பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு * பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து * கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே * மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு

  

 

  

 

  


144   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 69

வெற்பென்று வேங்கடம் பாடும் * வியன்துழாய்க்

கற்பென்று சூடும் கருங்குழல் மேல் * மற்பொன்ற

நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான் *

பூண்டநா ளெல்லாம் புகும்

  

 

  

 

  


145   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 70

புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து * அருவி

உகுமதத்தால் கால்கழுவிக் கையால் * மிகுமதத்தேன்

விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே *

கண்டு வணங்கும் களிறு

  

 

  

 

  


146   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 71

களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி *

ஒளிறு மருப்பொசிகை யாளி பிளிறி

விழ * கொன்று நின்றதிரும் வேங்கடமே * மேல்நாள்

குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று

  

 

  

 

  


147   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 72

குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை *

சென்று விளையாடும் தீங்கழைபோய் * வென்று

விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே *

மேலை இளங்குமரர் கோமான் இடம்

  

 

  

 

  


148   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 73

இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி *

வடமுக வேங்கடத்து மன்னும் * குடம்நயந்த

கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே*

நாத்தன்னா லுள்ள நலம்

  

 

  

 

  


149   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 75

சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் *

ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை * சேர்ந்து

சினவேங்கை பார்க்கும் திருமலையே * ஆயன்

புனவேங்கை நாறும் பொருப்பு

  

 

  

 

  


150   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 89

முடிந்த பொழுதில் குறவாணர் * ஏனம்

படிந்துழுசால் பைந்தினைகள் வித்த * தடிந்தெழுந்த

வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே * மேலொருநாள்

தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு

  

 

  

 

  


151   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 8

காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில் * இந்நாள்

பாண்குன்ற நாடர் பயில்கின்றன * இதெல்லா மறிந்தோம்

மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்

சேண்குன்றம் சென்று * பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே

  

 

  

 

  


152   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 10

மாயோன் வடதிருவேங் கடநாட * வல் லிக்கொடிகாள்

நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரையீர் * நுமது

வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்

ஆயோ அடும்தொண்டை யோ * அறை யோவி தறிவரிதே

  

 

  

 

  


153   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 15

கயலோ நுமகண்கள் என்று களிறுவினவி நிற்றீர் *

அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை * கடல்கவர்ந்த

புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்

பயலோ விலீர் * கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே

  

 

  

 

  


154   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 31

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம் * என்தலைமேல்

அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம் * அம்பொன் மாமணிகள்

திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்

மிசைமின் மிளிரிய போவான் * வழிக் கொண்ட மேகங்களே

  

 

  

 

  


155   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 50

ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை * விரைந்துநந்தேர்

நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று * தேன்நவின்ற

வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்

மண்முதல் சேர்வுற்று * அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே

  

 

  

 

  


156   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 60

** முலையோ முழுமுற்றும் போந்தில * மொய்பூங் குழல்குறிய

கலையோ அரையில்லை நாவோ குழறும் * கடல்மண்ணெல்லாம்

விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்

மலையோ * திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே

  

 

  

 

  


157   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 67

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று *

ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு * அசுரர்செற்ற

மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்

தூவியம் பேடையன் னாள் * கண்க ளாய துணைமலரே

  

 

  

 

  


158   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 81

உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய் * இவளைப்

பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் * துழாய்குழல்வாய்த்

துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்

இருகின்ற தாலிவ ளாகம் * மெல் லாவி எரிகொள்ளவே

  

 

  

 

  


159   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 1.8.3

கண்ணா வானென்றும் * மண்ணோர்விண்ணோர்க்கு *

தண்ணார் வேங்கட * விண்ணோர் வெற்பனே

  

 

  

 

  


160   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.6.9

எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கைசெற்றாய் * மராமரம்

பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா *

கொந்தார்தண்ணந்துழாயினாயமுதே உன்னையென்னுள்ளே குழைத்தவெம்

மைந்தா * வானேறே, இனியெங்குப்போகின்றதே?

  

 

  

 

  


161   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.6.10

போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள் * தாய்தந்தையுயி

ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ *

பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே பரமா * தண்வேங்கட

மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே

  

 

  

 

  


162   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.7.11

பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன் *

எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த

கற்பகம் * என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்

வெற்பன் * விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே

  

 

  

 

  


163   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.1

** ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி *

வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம் *

தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து *

எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே

  

 

  

 

  


164   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.2

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை * வானவர் வானவர் கோனொடும் *

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து *

அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே

  

 

  

 

  


165   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.3

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்

கண்ணன் * செங்கனி வாய்க்கரு மாணிக்கம் *

தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து *

எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே

  

 

  

 

  


166   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.4

ஈசன் வானவர்க் கென்பனென் றால் * அது

தேச மோதிரு வேங்கடத் தானுக்கு *

நீச னென் நிறை வொன்றுமி லேன் * என்கண்

பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

  

 

  

 

  


167   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.5

சோதி யாகியெல் லாவுல கும்தொழும் *

ஆதி மூர்த்தியென் றாலள வகுமோ *

வேதி யர்முழு வேதத் தமுதத்தை *

தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே

  

 

  

 

  


168   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.6

வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும் *

தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார் *

வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன

லாங்க டமை * அதுசுமந் தார்க்கட்கே

  

 

  

 

  


169   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.7

சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு *

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் *

நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு *

சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே

  

 

  

 

  


170   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.8

** குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் *

அன்று ஞாலம் அளந்த பிரான் * பரன்

சென்று சேர்திரு வேங்கட மாமலை *

ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே

  

 

  

 

  


171   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.9

ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி *

வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்

தாயன் * நாண்மல ராமடித் தாமரை *

வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே

  

 

  

 

  


172   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.10

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று *

எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ *

பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம் *

மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே

  

 

  

 

  


173   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.3.11

** தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை *

நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல் *

கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர் *

வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

  

 

  

 

  


174   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.5.8

வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை *

பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற *

ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி *

ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே

  

 

  

 

  


175   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.9.1

** சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ *

என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன் *

தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து *

என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே

  

 

  

 

  


176   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.5.11

** மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை *

வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர் *

காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால் *

வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே

  

 

  

 

  


177   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.1

** மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு *

நீலக் கருநிற மேக நியாயற்கு *

கோலச்செந் தாமரைக் கண்ணற்கு * என் கொங்கலர்

ஏலக் குழலி யிழந்தது சங்கே

  

 

  

 

  


178   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.2

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு *

செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு *

கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு * என்

மங்கை யிழந்தது மாமை நிறமே

  

 

  

 

  


179   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.3

நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட *

திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு *

கறங்கிய சக்கரக் கையவ னுக்கு * என்

பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே

  

 

  

 

  


180   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.4

பீடுடை நான்முக னைப்படைத்தானுக்கு *

மாடுடை வையம் அளந்த மணாளற்கு *

நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு * என்

பாடுடை அல்குல் இழந்தது பண்பே

  

 

  

 

  


181   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.5

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு *

மண்புரை வையம் இடந்த வராகற்கு *

தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு * என்

கண்புனை கோதை இழந்தது கற்பே

  

 

  

 

  


182   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.6

கற்பகக் காவன நற்பல தோளற்கு *

பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு *

நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு * என்

விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே

  

 

  

 

  


183   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.7

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு *

பையர வினணைப் பள்ளியி னானுக்கு *

கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு * என்

தையல் இழந்தது தன்னுடைச் சாயே

  

 

  

 

  


184   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.8

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு *

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு *

பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு * என்

வாசக் குழலி இழந்தது மாண்பே

  

 

  

 

  


185   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.9

மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு *

சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு *

காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு * என்

பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே

  

 

  

 

  


186   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.10

பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு *

மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு *

நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு * என்

கற்புடை யாட்டி யிழந்தது கட்டே

  

 

  

 

  


187   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.6.11

** கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை *

கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல் *

கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர் *

கட்டெழில் வானவர் போகமுண் பாரே

  

 

  

 

  


188   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.1

** உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே *

நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி நெடியாய் அடியே னாருயிரே *

திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே *

குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே

  

 

  

 

  


189   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.2

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம் *

சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே *

சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே *

ஆறா அன்பில் அடி யேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே

  

 

  

 

  


190   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.3

வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா மாய அம்மானே *

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே *

தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே *

அண்ண லே!உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே

  

 

  

 

  


191   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.4

ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல் *

தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா *

தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே *

பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே

  

 

  

 

  


192   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.5

புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ *

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ *

திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே *

திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே

  

 

  

 

  


193   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.6

எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று *

எந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய் *

மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே *

மெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே

  

 

  

 

  


194   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.7

அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே *

கொடியா அடுபுள் ளுடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே *

செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங் கடத்தெம் பெருமானே *

நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே

  

 

  

 

  


195   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.8

நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில் *

நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும் *

சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே *

மாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே

  

 

  

 

  


196   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.9

வந்தாய் போலே வாராதாய் வாரா தாய்போல் வருவானே *

செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே எனதுயிரே *

சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே *

அந்தோ அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே

  

 

  

 

  


197   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.10

** அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங் கை யுறைமார்பா *

நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய் என்னை ஆள்வானே *

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே *

புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே

  

 

  

 

  


198   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.10.11

** அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர் வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும் *

படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் *

முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும் *

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே

  

 

  

 

  


199   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.2.1

** நங்கள் வரிவளை யாயங் காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி *

நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன் *

சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன் *

வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே

  

 

  

 

  


200   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.3.8

இன்றிப்போக இருவினையுங்கெடுத்து *

ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான் *

நின்றவேங்கடம் நீணிலத்துள்ளது *

சென்றுதேவர்கள் கைதொழுவார்களே

  

 

  

 

  


201   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.5.6

** மேயான் வேங்கடம் * காயா மலர்வண்ணன் *

பேயார் முலையுண்ட * வாயான் மாதவனே

  

 

  

 

  


202   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.8

** திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே *

திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *

அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே *

ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே