091-Thiruvanvandoor


Thiruvanvandoor ( Sri Paambanaiyappa Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.1

** வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் *

செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும் *

கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு *

கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.2

காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய் *

வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர் *

நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு *

பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.3

திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள் *

சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும் *

கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு *

இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.4

இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள் *

விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர் *

கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு *

உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.5

உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள் *

திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர் *

புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு *

புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.6

போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள் *

சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும் *

ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு *

மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.7

ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே *

செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர் *

கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால் *

செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.8

திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய் *

செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர் *

பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள் *

கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.9

அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள் *

விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும் *

கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு *

கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.10

வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள் *

தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர் *

மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த *

ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.1.11

** மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட *

வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன *

பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு *

இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே