040-ThiruPaarthanpalli


Thiru Paarthanpalli ( Sri Thamaraiyal Kelvan Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.1

** கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும் * காமருசீர்க்

குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும் *

தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும் *

பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.2

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும் *

வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும் *

செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி *

பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.3

அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு

செண்ட னென்றும் * நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும் *

வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி *

பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.4

கொல்லை யானாள் பரிசழிந்தாள் கோல்வ ளையார் தம்முகப்பே *

மல்லை முன்னீர் தட்டிலங்கை கட்ட ழித்த மாயனென்றும் *

செல்வம் மல்கு மறையோர்நாங்கை தேவ தேவ னென்றென்றோதி *

பல்வ ளையா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.5

அரக்க ராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற *

குரக்க ரசனென் றும்கோல வில்லி யென்றும் * மாமதியை

நெருக்கு மாட நீடுநாங்கை நின்ம லன்தா னென்றென்றோதி *

பரக்க  ழிந்தா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.6

ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும் * நானி லஞ்சூழ்

வேலையன்ன கோலமேனி வண்ண னென்றும் * மேலெழுந்து

சேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி *

பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.7

நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும் * நான்மறைகள்

தேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும் * சிறை கொள்வண்டு

சேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி *

பாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.8

உலக மேத்து மொருவனென்றும் ஒண்சு டரோடும் பரெய்தா *

நிலவு மாழிப் படையனென்றும் நேச னென்றும் * தென்திசைக்குத்

திலத மன்ன மறையோர்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி *

பலரு மேச வென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.9

கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும் *

எண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும் *

திண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி *

பண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.8.10

** பாருள் நல்லமறை யோர்நாங்கைப் பார்த்தன் பள்ளிசெங் கண்மாலை *

வார்கொள் நல்ல முலைமடவாள் பாடலைந் தாய் மொழிந்தமாற்றம் *

கூர்கொள் நல்ல வேல்கலியன் கூறு தமிழ் பத்தும்வல்லார் *

ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளு மெய்துவாரே